சிறுபான்மையினர் மீது ஏற்படுத்திய அநீதியே எமது பின்னடைவுக்குக் காரணம் : எஸ்.பி

சிறுபான்மையினர் மீது ஏற்படுத்திய அநீதியே எமது பின்னடைவுக்குக் காரணம் : எஸ்.பி
[ திங்கட்கிழமை, 05 யூலை 2010, 08:56.32 AM GMT +05:30 ]
வரலாற்று ரீதியாகப் பார்க்கும் போது, சிறுபான்மை மக்களுக்கு ஏற்படுத்தப்பட்ட அநீதி காரணமாகவே நாடு பல்வேறு பின்னடைவுகளைச் சந்தித்தது என்பது புலனாகிறது.

தொடர்ந்தும் அவ்வாறு நடைபெறாது தடுப்பதற்கான நடவடிக்கைகளை நாம் எடுக்க வேண்டுமென உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்கா தெரிவித்தார்.


கண்டி விகாரமகாதேவி மகளிர் கல்லூரியில் இடம்பெற்ற வைபவம் ஒன்றில் கலந்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.


அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,


1936ஆம் ஆண்டு நடைமுறையில் இருந்த டொனமூர் ஆட்சிகாலக் கவுன்ஸிலில் சிங்கள மக்கள் மட்டுமே அமைச்சரவை அந்தஸ்து பெற்றிருந்தனர். அதனால் ஏற்பட்ட அதிருப்தியின் வெளிப்பாடாகவே அன்று 50:50 அதிகாரம் தேவை என்ற கோரிக்கை எழுந்தது.


அதேபோல் 1956 ல் தனிச் சிங்களச் சட்டம் காரணமாக இனக் கலவரம் ஒன்று வெடித்தது.


1972, 1978 திருத்தங்கள் உட்பட இன்னும் பல விடயங்கள் தொடர்பாக எழுந்த பிரச்சினைகள் இளைஞர் போராட்டமாக மாறி 30 வருட யுத்தமாக முடிவுற்றது.இதன் மூலம் நாம் சந்தித்த அனுபவங்கள் இன்னும் நீங்கவில்லை.


எனவே சிறுபான்மை மக்களின் உரிமைகள் பற்றியும் நாம் சிந்தித்து அநீதி ஏற்படாத வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும்” என்றார்.

Speak Your Mind

Tell us what you're thinking...
and oh, if you want a pic to show with your comment, go get a gravatar!