யாழ். மருத்துவ மாது கொலைச் சந்தேக நபரை, பொலிஸார் அனுராதபுரம் சிறைச்சாலைக்கு மாற்ற முயற்சி

யாழ். மருத்துவ மாது கொலைச் சந்தேக நபரை, பொலிஸார் அனுராதபுரம் சிறைச்சாலைக்கு மாற்ற முயற்சி
[ வியாழக்கிழமை, 15 யூலை 2010, 04:21.52 PM GMT +05:30 ]
அண்மையில் யாழ். வேலணைப் பிரதேசத்தில் தர்ஷிகா என்ற குடும்பநல மருத்துவ மாதின்  படுகொலையுடன் தொடர்புடைய சந்தேக நபரான சிங்கள மருத்துவரை அனுராதபுர சிறைச்சாலைக்கு மாற்றுவதற்கான முயற்சிகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த குறித்த வைத்தியர், நெஞ்சு வலி ஏற்பட்டதாகத் தெரிவித்ததனைத் தொடர்ந்து யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.


எனினும், குறித்த வைத்தியர் மீது சிறைச்சாலையில் தாக்குதல் நடத்தியதாக பொலிஸார் குற்றம் சுமத்தியுள்ளனர்.


இந்த சம்பவம் குறித்து ஊர்காற்றுறை நீதவான் வசந்தசேனனிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.


சந்தேக நபரை பரிசோதனை செய்த வைத்தியர்கள் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றமைக்கான சாட்சிகள் கிடையாது என அறிவித்துள்ள அதேவேளை, சிறைச்சாலையில் சந்தேக நபர் தாக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


தாக்குதல் நடத்தப்பட்டதா என்பது குறித்த “ஸ்கான்” அறிக்கை கிடைக்கப் பெற்றதன் பின்னர் உறுதிப்படுத்த முடியும் என போதனா வைத்தியசாலை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். அத்துடன், சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையையும் சமர்ப்பிக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.


சந்தேக நபருக்கு யாழ். போதனா  வைத்தியசாலையில் அச்சுறுத்தல் நிலவுவதாகவும், அவரை அனுராதபுர வைத்தியசாலைக்கு மாற்றுமாறும் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எனினும், பொலிஸாரின் கோரிக்கையை நிராகரித்த நீதவான் குறித்த சந்தேக நபரான வைத்தியருக்கு மேலதிக பாதுகாப்பை வழங்கி யாழ்ப்பாண சிறைச்சாலையிலேயே தடுத்து வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

Speak Your Mind

Tell us what you're thinking...
and oh, if you want a pic to show with your comment, go get a gravatar!